ஞாயிறு, 10 மார்ச், 2013

20. காதல் என்றால்...


படம்: பாக்யலக்ஷ்மி
பாடல்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் - ராமமுர்த்தி
குரல்கள்: ஏ.எல்.ராகவன், பி.சுசீலா
நடிகர்கள்; ஜெமினி கனேசன், ஈ.வி.சரோஜா

பல்லவி 
நாயகன்: 
காதல் என்றால் ஆணும் பெண்ணூம் இருவர் வேண்டுமன்றோ?
இல்லாமல் எதுவும் இல்லையன்றோ?

நாயகி: 
காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ?
முன்னாலே உரிமை வேண்டுமன்றோ?

சரணம் 1 
நாயகன்: 
தூது செல்வார் எனக்காருமில்லை
சொல்வதில் முன்பின் பழக்கமில்லை
நேரடியாகவே தேடி வந்தேன்
நேரிழையே நீ அருள் புரிவாய்.

நாயகி: 
வாங்கிய பூசைகள் போதாதா?
மங்கையின் பின்னால் வரலாமா?
ஆயிரம் வேஷங்கள் போட்டாலும்
என் ஆசையும் அன்பும் கிடைக்காது

சரணம் 2 
நாயகன்: 
ஆடச் சொன்னால் நான் ஆடுகிறேன்
பாடச் சொன்னாலும் பாடுகிறேன்
பாவையே உந்தன் காதலிலே
பைத்தியம் போல் நான் ஆகி விட்டேன்

நாயகி:
காதல் பைத்தியம் பொல்லாது
கையும் காலும் நில்லாது
வாராய் எந்தன் பைத்தியமே
மனசுக்கு செய்வேன் வைத்தியமே

சரணம் 3 
நாயகன்: 
காதலைப் படைத்தவன் பேர் வாழ்க

நாயகி: 
அதைக் கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க

நாயகன்: 
கடற்கரை சோலை தினம் வாழ்க

இருவரும்: 
கனிந்தோம் மகிழ்ந்தோம் நாம் வாழ்க



காதல் டூயட்டுகளில் சற்று வித்தியாசமானது இது. பாடலின் துவக்கத்தில் நாயகன் மட்டும் நாயகியைக் காதலிக்கும் ஒருதலைக் காதலாகத் துவங்கி, பல்லவியிலும், முதல், இரண்டாவது சரணங்களிலும் காதலன் தன் காதலைச் சொல்ல, காதலி அதை நிராகரித்து அவனை எள்ளி நகையாடுகிறாள். ஆனால் இரண்டாவது சரணத்தின் முடிவில் காதலி மனம் மாறுகிறாள். மூன்றாவது சரணத்திலும் இறுதிப் பல்லவியிலும் காதலி காதலனுடன் இசைந்து பாடுகிறாள்.

கவிஞரின் வரிகளில் வெளிப்படும் இந்தக் காட்சியமைப்பு, இசை வடிவமைப்பிலும் பிரதிபலிக்கிறது. முகப்பு இசையிலிருந்து துவங்குவோம். இந்த முகப்பு இசையைக் கேட்கும்போதெல்லாம் அது ஏதோ அபஸ்வரமாக ஒலிப்பதாக எனக்குத் தோன்றும். என் இசை அறிவு பூஜ்யத்துக்கும் கீழே என்பதால் என் உணர்வு தவறாக இருக்கலாம். ஆயினும் எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.

முகப்பு இசையைக் கவனித்தால் சற்றே விசித்திரமான ஒரு தொனியில் துவங்கி (இதைத்தான் நான் ஒரு மாதிரி அபஸ்வரம் போல் தோன்றுவதாகக் குறிப்பிட்டேன்) ஒரு சில வினாடிகளிலேயே ஒருமித்த (harmonious) இசையாக மாறுகிறது. இது, காதலனின் ஒருதலைக் காதல் அபஸ்வரத்தில் துவங்கினாலும் விரைவிலேயே காதலியுடன் சுருதி சேர்ந்து இனிமையாகி விடுவதைக் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.

கவிஞருக்கு இது போன்ற பாடல்கள் மிக எளிதாகக் கை வரக் கூடியவை. பல்லவியில் காதலன் தன் காதலை மறைமுகமாகச் சொல்ல, காதலி 'காதல் ஒன்றும் கடைச் சரக்கல்ல' என்று சொல்லி, அவன் காதலை நிராகரிக்கிறாள்.

முதல் சரணத்தில் காதலன் தன் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சுகிறான். காதலி 'வாங்கிய பூசைகள் போதாதா?' என்று கடுமையாகப் பேசி மறுக்கிறாள். காதலி மறுத்தபின், காதலன் ஹம்மிங் பாடுவதாக வருகிறது. இதை உற்றுக் கவனித்தால், காதலன் ஹா ஹ ஹா ஹா.. என்று ஹம்மிங் செய்வதைக் கவனிக்கலாம். இந்த ஹா ஹ ஹா அவனது மன வலியை வெளிப் படுத்துவதாக இருக்கிறது. பிறகு இது ஓஹொஹொஹொஹோ என்று மாறி, ஹம்மிங்கின் இறுதியில் காதலியும் இணைந்து கொள்கிறாள். அப்போதே அவள் மனம் சற்றே இரங்கி விட்டதாகக் கொள்ளலாம்.

இரண்டாவது சரணத்தில், காதலன் தான் காதலால் பைத்தியம் பிடித்து அலைவதாகக் கூறுகிறான். இப்போது காதலி முழுவதும் மனம் இரங்கி அவன் மனதுக்கு வைத்தியம் பார்ப்பதாகச் சொல்லி அவன் காதலை ஏற்றுக் கொள்கிறாள். காதலை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகக் காதலனை முந்திக் கொண்டு அவளே 'ஆஹ ஹா ஹா..' என்று ஹம்மிங் பாட, காதலனும் பிறகு சேர்ந்து கொள்கிறான்.

இதற்குப் பிறகு இசையில் ஒரு அற்புதத்தைக் கவனிக்கலாம். ஹம்மிங்குக்குப் பிறகு பல்லவி பாடப் படவில்லை. காதலனும், காதலியும் வெவ்வேறு பல்லவியை அல்லவா பாடியிருக்கிறார்கள்? காதலி மனம் மாறிவிட்டாலும் முழுதாக மனம் மாறிக் காதலனின் பல்லவியைப் பாடுவதாகக் காட்டினால் சற்றே prematureஆகத் தோன்றும் என்பதாலோ என்னவோ பல்லவியைத் தவிர்த்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இப்போது மூன்றாவது சரணத்துக்கு முன் வரும் இணையிசையைக் கவனித்தால். இருவர் இணைந்து போவது போன்ற உணர்வு ஏற்படும் (இது வயலின் என்று நினைக்கிறேன். ஆயினும் இசைக் கருவிகளை அடையாளம் காணும் திறமை எனக்கு இல்லை) மூன்றாவது சரணத்தில் காதலனும், காதலியும் காதலைப் புகழ்ந்து பாடுகிறார்கள். முதல் வரி காதலன், இரண்டாவது காதலி, மூன்றாவது காதலன், இறுதி வரி இருவரும் இணைந்து, என்று அழகாக வருகிறது. பிறகு காதலன் பல்லவியைப் பாட, காதலி பின்னணியில் ஹம்மிங் இசைத்துத் தன் இசைவை வெளிப்படுத்துகிறாள். பிறகு காதலன் பாடிய பல்லவியைக் காதலி திரும்பப் பாட, பாடல் நிறைவு பெறுகிறது.

ஒரு சாதாரண டூயட்டில் இவ்வளவு நுணுக்கமான அமைப்புகளை வடிவைமைத்திருப்பது மெல்லிசை மன்னரின் தனிச் சிறப்பு. இது ஒரு அருமையான, இனிமையான, அலுக்காத மெலடி. காதலன் சற்றே கோமாளித்தனமாகப் பாடும் வகையில் பாடல் வரிகள் இருப்பதால், ஏ.எல்.ராகவனின் குரலைப் பயன்படுத்தியிருகிறார் மெல்லிசை மன்னர் என்று நினைக்கிறேன். இரண்டாவது சரணத்தில், 'பைத்தியம் போல் நான் ஆகி விட்டேன்' என்று இவர் பாடுவது நாகேஷ் பாடுவது போல் தொனிக்கிறது.

இந்தப் பாடல் nsvtimes.com இன் 2010 ஆண்டு நிகழ்ச்சியி,ல் ஸ்ரீதர் நவ்ராக்ஸ் இசைக் குழுவால் பாடப்பட்டது. அப்போது இந்தப் பாடல் பற்றி ஓரிரு வரிகள் சொல்லும் வாய்ப்பை நிகழ்ச்சிஅமைப்பாளர்கள் (முரளி, வத்ஸன் மற்றவர்கள்) எனக்கு அளித்திருந்தார்கள். நேரமின்மையால், சில பாடல்கள் தொகுப்புரை இல்லாமலே இசைக்கப்பட்டன. அவற்றில் இதுவும் ஒன்று. அதனாலேயே இது பற்றி விரிவாக எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் என்னை வியக்க வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

நீங்கள் ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்டு விட்டு என் மனதுக்குத் தோன்றியவை எந்த அளவுக்குச் சரியானவை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

Originally posted in msvtimes.com on 09/03/2013
_________________

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

19. ஆயிரம் பெண்மை மலரட்டுமே



ஆயிரம் பெண்மை மலரட்டுமே
படம்: வாழ்க்கைப்படகு
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: எம்.எஸ்.வி, பி.சுசிலா மற்றும் குழுவினர்

'ஆயிரம் பெண்மை மலரட்டுமே' பாடல் கவிஞரின் அனாயாசமான சொல் வீச்சுக்கும், மெல்லிசை மன்னரின் சளைக்காத இசை வீச்சுக்கும் ஒரு நல்ல உதாரணம்.

முழுப் பாடல் இதோ.

ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்

ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய்ச் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்.

மன்னவனே ஆனாலும்
பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும்
வெஞ்சிறையில் போட்டாலும்
உடல் அன்றி உள்ளம் உன்னைச் சேராது
ஆ..ஆ.ஆ....
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
நில் நில் நில் மன்னா நில் நில் நில்

இந்தப் பாடலைக் கேட்கும்போது, கேட்பவர்களைக் கட்டிப்போட வைக்கும் ஒரு ஆற்றல் இந்தப் பாடலுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றும். 'கொஞசம் நில். இதைக் கேட்டு விட்டுப் போ!' என்று கட்டளையிடுகிற தொனியை இப்பாடலில் என்னால் உணர முடிகிறது.

நாட்டியமாடும் ஒரு பெண் தன்னைப் பற்றி உலகுக்கு அறிவிக்கும் பாடல் இது. பொதுவாக நாட்டியம் ஆடும் பெண்களை அடையப் பலர் நினைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிற நிகழ்ச்சி.(கதைகளிலும், திரைப்படங்களிலும் அப்படித்தானே காட்டுகிறார்கள்!) 'ஆனால் நான் அப்படி இல்லை, என்னிடம் யாரும் நெருங்க வேண்டாம்' என்று இங்கே கதாநாயகி அறிவிக்கிறாள். சாதாரணமாகச் சொன்னால் போதாது, அடித்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பது போல் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் கவிஞர்.

பாடலின் துவக்கம் ஆர்மோனிய இசையுடன் துவங்கும்போது, பாடல் வரிகளை எடுத்துக் கொடுத்திருப்பது மெல்லிசை மன்னரின் குரல். மிக இளமையாக ஒலிக்கும் அந்தக் குரல் அவருடைய பிற்காலப் பாடல்களில் ஒலித்த குரலுடன் ஒப்பிடும்போது அடையாளம் காண முடியாததாக இருக்கிறது. (ஒருவர் இது வீரமணியின் குரல் என்று You Tube இல் குறிப்பிட்டிருக்கிறார்!)

முதல் சரணத்தில் பொதுவாகப் பெண்களின் மன இயல்பைப் பற்றிச் சொல்கிற கதாநாயகி, இரண்டாவது சரணத்தில் தன்னைப் பற்றிப் பேசுகிறாள். ஒரு மன்னன் அவளை அடைய நினைக்கும்போது அவனைத் துச்சமாகப் பேசுகிறாள். மன்னன் வருவதற்கான கட்டியம் இரண்டாவது சரணத்தின் முந்தைய இடை இசையில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. இசைத்தட்டுகளில் இது இடம் பெறாததால் பல வருடங்களுக்க்ப் பிறகு ஒளிக்காட்சியில் இதைக் கேட்டபோது எனக்கு வியப்பு ஏற்பட்டது.

'மன்னவனே ஆனாலும்..' என்று துவங்கும் விருத்தம் இரண்டாவது சரணத்தின் துவக்கத்தில் வருகிறது. 'இதை முக்கியமாக எல்லோரும் கவனிக்கவேண்டும்' என்று அறிவிப்பதுபோல், இந்த விருத்தம், சற்றே மெதுவான நடையில், தாளப் பின்னணி இல்லாமல் தொகையறா போல் ஒலிக்கிறது. மெதுவான நடையில் வரும் இந்த விருத்தத்தை வேகமான கதியில் வரும் 'மானும் பெண்ணும் ஒரு ஜாதி. என்ற சரணத்தின் இரண்டாவது பகுதியுடன் ஒரு ஹம்மிங் மூலம் இணைதிருப்பது ('seamless fusion ) மெல்லிசை மன்னருக்கு மட்டுமே கை வந்த ஒரு கலை.

'சொல், சொல், சொல்' என்ற வரிகளின் பொருள், 'இதை எல்லோருக்கும் போய்ச் சொல்' என்பதுபோல் உறுதியுடனும், அதிகாரத்துடனும் சொல்லப்படுவதை இசை உணர்த்துகிறது.

இதே 'சொல், சொல், சொல்' வேறு இரண்டு பாடலளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

'சொன்னது நீதானா,
சொல், சொல், சொல் என்னுயிரே .'
('சொன்னது நீதானா" - நெஞ்சில் ஓர் ஆலயம்)

இங்கே, 'நீ இப்படிச் சொல்லலாமா?' என்ற ஆதஙகமும், காயப்பட்ட உணர்வும் வெளிப்படுகிறது.

'என் மனத் தோட்டத்து வண்ணப்பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்.'
('பொன்னெழில் பூத்தது புது வானில்' - கலங்கரை விளக்கம்)
இங்கே தகவலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு ஒலிக்கிறது.

இந்த மூன்று இடங்களையும் ஒப்பிட்டால், மெல்லிசை மன்னர் எப்படி 'சொல்'லுக்கு உயிர் கொடுக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ரகுவம்சத்தின் துவக்கத்தில் காளிதாசன், பார்வதியும் பரமேஸ்வரனும் சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். கவிஞரும், மெல்லிசை மன்னரும் கூட, சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பதைப் பல பாடல்களில் நாம் காணலாம்.

'சொல்லின் ராஜ்ஜியம் உனது அந்த
இசையின் ராஜ்ஜியம் எனது'
என்று மெல்லிசை மன்னர் 'சொல்'லாமல் 'சொல்'லி இருக்கிறார்.

பாடலை இங்கே பார்த்தும் கேடும் மகிழலாம்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே


Originaaly posted in MSVTimes.com/forum  on 28th Jan, 2013.