திங்கள், 3 ஏப்ரல், 2017

33. அன்பு வந்தது

1971ஆம் ஆண்டு வெளிவந்த 'சுடரும் சூறாவளியும்' படத்தில் இடம் பெற்ற  'அன்பு வந்தது' என்னை ஆள வந்த ஒரு பாடல்.

இப்படி ஒரு இனிமை பொங்கி வழியும் பாடலா! இதை நான் முதலில் கேட்டது திரைப் படம் பார்த்தபோதுதான். திரைப் படத்தில் கொஞ்சம் செயற்கைத்தனம் இருந்தாலும், இந்தப் பாடலே இத் திரைப்படத்தின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.

முதல் முறை திரையில் கேட்டபோதே என்னை ஆட்கொண்ட பாடல் இது. ஒரு தந்தை தன் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டு பாடும் பாடலை கவிஞரைத் தவிர வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக எழுத முடியும்.

இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை.

'வாழ்ந்தால் எந்நாளும் உமக்கென வாழ்வேன்,
வாடாமலர் போலே உங்களைக் காப்பேன்'

என்ற வரிகள் ஒரு தந்தையாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை என் மனதில் விதைத்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. ஏனெனில் நான் அடிக்கடி நினைவு கூர்ந்து நெகிழும் வரிகள் இவை.

"கண்ணிரண்டில் கலக்கமின்றி அமைதி காணலாம்
காலம் வெல்லும் வெல்லும் என்று உறுதி கொள்ளலாம்"

என்ற வரிகள் 'சோதனைகளைக் கண்டு கலங்காமல் வாழ்க்கையை எதிர் கொண்டால் , காலம்  நமக்கு கைகொடுக்கும்' என்ற வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான செய்தியை  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மென்மையாகச் சொல்லுகின்றன.

இதைத் தொடர்ந்து வரும்

"தாயில்லாத பிள்ளைதனை  நான் விட மாட்டேன்
 நான் இல்லாதபோதும்  தேவன் கைவிட மாட்டான்"

என்ற வரிகள் வரப்போகும் பிரிவையும் அதைத்தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளையும் முன்கூட்டி உரைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.  தந்தை தன குழந்தைகளை விட்டுப் பிரிய நேர்கிறது. ஆனால் குழந்தைகள் வேறு யாராலோ வளர்க்கப்பட்டு வாழ்வில் மேன்மை அடைகிறார்கள். 'நான் இல்லாதபோதும்ம தேவன் கைவிட மாட்டான்' என்ற தந்தையின் நம்பிக்கை உண்மையாகிறது!

மெல்லிசை மன்னரின் உற்சாகமான இசை இந்தப் பாடலுக்கு ஒரு அலாதியான ஈர்ப்புசக்தியை வழங்கியிருக்கிறது. கேட்பவர்களைக் கட்டிப்போடும் இனிமையான இசை.

இந்தப் பாடல் ஒரு நகர்ப்புறச்  சூழலில் படமாக்கப்பட்டிருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த
People's Park என்று அழைக்கப்பட்ட  மிருகக்காட்சி சாலையில் படமாக்கப்பட்டது என்று நினைக்கிறேன். நகரச்  சுழ்நிலையையும், ஜெமினியின் உற்சாகமான மனநிலையையும் பிரதிபலிக்கும் வகையில் பின்னணி இசையும் அமர்க்களமாக இருக்கிறது.

இதே பாடலை  டி.எம் எஸ் பாடும் ன்னொரு வடிவம் மெல்லிசை மன்னருக்குக் கிடைத்த ஒரு அயனான வாய்ப்பு. டி எம் எஸ்ஸை விட எஸ் பி பியே இப்பாடலைச் சிறப்பகப் பாடியிருக்கிறார் என்று  youtubeஇல் ஒருவர் குறிப்பிட்டது டி எம் எஸ் ரசிகர் ஒருவரைக் கோபமூட்டியிருக்கிறது. இதற்குக் காரணம் மெல்லிசை மன்னர்தான்.

எஸ் பி பி பாடுவது மூலப் பாடல். டி எம் எஸ் பாடுவது அதை நினைவு கூர்ந்து. அதனால் அது மூலத்தை விட ஒரு மாற்றுக் குறைந்துதானே இருக்க வேண்டும்? மேலும் எஸ் பி பி பாடும்போது உற்சாகமாகவும் நம்பிக்கையோடும் பாடுகிறார். டி எம் எஸ் பாடலில் முத்துராமன் தன் தந்தையுடன் சிறு வயதில் இருந்ததை நினைத்துப் பாடுகிறார். அதனால் பாடலில் துள்ளல் எல்லாம் இல்லை. அவர் வாழ்க்கை நன்றாக இருப்பதால் சோகமும் இல்லை. மெலிதான ஏக்கம் மட்டும்தான் இருக்கிறது.  டி எம் எஸ் கொஞ்சம் அடக்கியே வாசிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

டி .எம்.எஸ். பாடுவது கிராமியச் சுழலில். அதற்கேற்பப் பாடல் வரிகளும் இசையும் மாறுபடுகின்றன!

'ஆறு வெள்ளம் போன பின்பும் ஆற்று மண்ணிலே
வரும் ஊற்று வெள்ளம் போல வந்து உறவு கொள்ளுவேன்'

என்று கிராமப்புற உதாரணம் மூலம் அண்ணன் தங்கைக்கு உறுதியளிப்பதை கவனியுங்கள். எவ்வளவு பொருத்தமான, ஆழமான பொருள் பதிந்த உதாரணம் இது! ஒருவேளை என்னிடம் செல்வம் இல்லாவிட்டாலும் எப்படியாவது உன்னைக் காப்பாற்றுவேன் என்ற உறுதி இது! கவிஞர் எழுதிய வரிகள் அல்லவா!

பாடலை ரசியுங்கள்.























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக